| தொடக்கநூல் (ஆதியாகமம்) | ||
|
|
||
|
வெள்ளப்பெருக்கின் முடிவு
1
கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள்,
கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று
வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது. 2 பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன; வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது. 3 மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது. 4 ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது. 5 பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன. 6 நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து, 7 காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது. 8 பின்னர். நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார். 9
ஆனால் அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே
பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும்
வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம்
பேழைக்குள் சேர்த்துக் கொண்டார். 10 அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார். 11
மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது
கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில்
வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார். 12 இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை. 13
அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில்
மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின்
மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது. 14 இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது. 15 அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது: 16 ″நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள். 17
உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய
உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை
பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்.″ 18 ஆகவே நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர். 19 விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.
நோவா பலி செலுத்துதல்
20
அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத்
தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச்
செலுத்தினார். 21
ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: ″மனிதரை
முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச்
சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான்
செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். 22
மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும்
குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும்
ஓய்வதில்லை.″ |
||
சனி, 25 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக